உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழாக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports