உழவுப்பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல அரசு உதவ வேண்டும் – நடிகர் கார்த்தி கோரிக்கை

நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் கார்த்தி கூறியதாவது, உழவன் அறக்கட்ட ளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும்போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிக்கத்தான் உழவர் விருதுகளைத் தொடங்கினோம்.

விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்குச் சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? விவசாயத்தை விடமாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலை முறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலை முறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும்.

விவசாயிகள் அவர்களின் விளைப்பொருட்களை அவர்களே கொண்டு சென்று தான் சந்தையில் விற்க வேண்டும். அதுவும் 2 மணி நேரத்திற்குள் விற்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும், காட்டைப் பார்க்க வேண்டும், பிற வேலைகளைப் பார்க்க வேண்டும். அவருக்குப் பையன் இருந்தால் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லையென்றால், எல்லாவற்றையும் செய்வதற்கு ஆட்கள் கிடையாது.

உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்கப் போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கி றேன்.

இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools