எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார்

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12-ந் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது. இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையை திறக்க இருந்ததால் அவராலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு பதில் 2-ம் கட்ட தலைவர்களை அனுப்புகிறோம் என்று கூறப்பட்டது.

ஆனால் இதை நிதிஷ் குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் தலைவர்கள் தான் கூட்டத்திற்கு வரவேண்டும். அப்போது தான் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த ஒருமித்த முடிவு எடுக்க முடியும் என்று கூறி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அன்றைய தினம் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில் நாளை மறுநாள் (23-ந் தேதி) பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற ‘கலைஞர் கோட்டம்’ திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 23-ந் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க இருக்கிறேன் என்று பேசியுள்ளார். இதன்படி நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமா? அல்லது கருத்து வேறுபாடு காரணமாக கடைசி நேரத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்காமல் காரணம் சொல்வார்களா? என்ற கேள்வியும் ஏற்பட்டு உள்ளது. இதனால் எந்தெந்த கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பது நாளை மாலைதான் தெரியவரும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news