எலிக்காய்ச்சலால் கர்ப்பிணி பலி! – கிராமம் முழுவதும் பரிசோதனை

பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ரொசாரியோ (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனிதா (22), இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர். வனிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த 24-ந்தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட அன்னூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வனிதாவும், அவரது கணவரும் சென்றனர்.

பின்னர் பண்டிகையை கொண்டாடி விட்டு ஊருக்கு வந்த வனிதாவிற்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல் குணமாகாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் வனிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதை அறிந்தனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வனிதா பலியானார்.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். வனிதா வசித்த பணிக்கம்பட்டி கிராமம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. புரவிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டது. அங்கு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காய்ச்சல் உள்ளவர்களுக்கு சளி மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீரின் தூய்மைத்தன்மை அறிய குடிநீரும் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. வனிதா கேரளா உள்பட பல இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து எலிக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதுபற்றியும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools