ஐபிஎல் கிரிக்கெட் – டெல்லியை வீழ்த்து 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை

ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65), ரிஷ்ப் பண்ட் (56) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டி காக் 12 பந்தில 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 ஓவரில் 45 ரன்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.

அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17-வது ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

ஆனால் 18-வது ஓவரின் முதல் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ரன் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools