X

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது.

கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 15 ரன்னிலும், பிரிவிஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது. திலக் வர்மா 38 ரன்னுடனும், பொல்லார்டு 5 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ரகானே 7 ரன்னுடன் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேப்டன் சிரேயாஸ் அய்யர், ஷியாம் பில்லிங்ஸ், நிதிஷ் ரானா, ரஸ்ஸல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பேட் கம்மின்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார். 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 போர்களை அடித்த அவர்
56 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.