ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி 6வது வெற்றியை பெற்ற சென்னை அணி

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று  நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக் 17 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 11 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. கேப்டன் பொல்லார்ட் 15 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி உறுதியானது.

சவுரப் திவாரி கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். 18 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி இரண்டு ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை சர்துல் தாக்குர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 அடித்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் மும்பை அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சவுரப் திவாரி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools