ஐபிஎல் 2024 – பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எட்டியது. சென்னை சார்பில் கேப்டன் கெய்க்வாட் (32), டேரில் மிட்செல் (30) மற்றும் ரவீந்திர ஜடேஜா (43) சிறப்பாக ஆடினர்.
பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

168 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோசோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சஷான்க் சிங் 27 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜிதேஷ் ஷர்மா கோல்டன் டக் ஆன நிலையில், அஷுடோஷ் ஷர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சார்பில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools