ஐபில் சூதாட்டம் – உத்தரபிரதேசத்தில் 9 பேர் கைது

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின்போது லேப்டாப், 20 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.3.86 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.பி.எல். போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news