ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி – சென்னை எப்.சி, மோகன் பகான் அணி இன்று மோதல்

11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று (திங்கட்கிழமை) பலப்பரீட்சை நடத்துகிறது.

கடந்த இரு சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அண்மையில் தூரந்த் கோப்பை போட்டியில் சென்னை அணி கால்இறுதிவரை முன்னேறியது. அதில் கேப்டன் அனிருத் தபா 2 கோல்கள் அடித்தார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார். மற்றொரு வீரர் பீட்டர் சிலிஸ்கோவிச் 3 கோல்கள் போட்டார். இதே போல் ஐ.எஸ்.எல். போட்டியிலும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளனர்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறுகையில், ‘கால்பந்தில் தாக்குதல் பாணியில் ஆடுவதையும், நிறைய கோல்கள் அடிப்பதையும் விரும்புகிறேன். அதற்கு ஏற்ப வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். எதிரணி வீரர்கள் செய்யும் தவறுகளை நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நமக்குரிய சாதகமான அம்சங்களையும் சரியாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்’ என்றார்.

கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக நேற்றிரவு நடந்த ஐதராபாத் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. ஒரு கட்டத்தில் ஐதராபாத் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 85-வது நிமிடத்தில் மும்பை வீரர் அல்பர்ட்டோ நோகுரா கோல் போாட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools