ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது – சவுரவ் கங்குலி

12-வது ஐ.பி.எல். போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.

ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட்கோலி, கேப்டனாக நீடிப்பதற்கு அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

ஆனால் ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன் ஷிப் உலக கோப்பை போட்டியில் எதிரொலிக்கும் என்று கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது.

ரோகித்சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். இங்கிலாந்தில் நடக்கும் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றனர்.

இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news