ஒடிசாவில் குடிசைப்பகுதியில் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் 16-நாடுகள் பங்கேற்கின்ற 15-வது ஆண்கள் ஆக்கி போட்டிகள் ஜனவரி 13 முதல் 29-வரை நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகின்ற இந்த உலகக்கோப்பை ஆக்கி போட்டிகளை காணவும், அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும், 3 நாள் சுற்றுப்பயணமாக புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா சென்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் ஆக்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தும், விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளையும் பார்வையிட்டார்.

மேலும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகின்ற ” மிஷன் சக்தி திட்டம்” குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து புவனேஸ்வர் நகரின் அருகில் உள்ள இஷநேஸ்வர் பிஜு ஆதர்ஷ் காலனி கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் “குழாய் மூலம் குடிநீர்” திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக் குழுவினர் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடிய போது “சமுதாய வளர்ச்சி என்பது மகளிர் கையில் மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிவதனன், விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் வினில் கிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools