ஒரே நாளில் 24,85,814 தடுப்பூசி போடப்பட்டது – தமிழக அரசு சாதனை

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ஒரே நாளில் பலருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதையடுத்து கடந்த 19-ந் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி மெகா முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நேற்று 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 29 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி மையங்கள் பலவற்றில் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையாக காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட 15 லட்சம் பேர் என்ற இலக்கு மதியம் 2.15 மணிக்கே கடந்து தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 763 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் சென்னையில் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூரில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேருக்கும், கோவையில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மெகா தடுப்பூசி முகாமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென வந்தார். தடுப்பூசி போட வந்தவர்களிடம் போதிய வசதிகள்உள்ளதா? என்று மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்து கொண்டார். மேலும் அங்கிருந்த சுகாதார ஊழியர்களிடம் இதுவரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்? என்று கேட்டறிந்தார்.

அயனாவரம் சாலையில் உள்ள பெத்தேல் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு வந்த பொது மக்களிடமும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடந்த தடுப்பூசி முகாம்களையும், மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரும் உடன் சென்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools