கட்டுப்பாடுகளை மீறி ரவிசாஸ்திரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது எப்படி?

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது, ரவி சாஸ்திரி தொற்றிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சாஸ்திரிவுடன் இருந்த சக பயிற்சியாளர்கள் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி, மற்றும் அணியைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் கேப்டன் விராட் கோலியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியால் கூட ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எந்த தகவலும் கொடுக்கமால் சென்றது தவறு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதனால், பயோ பபுள் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து பிசிசிஐ தரப்பு கூறுகையில், ‘கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இங்கிலாந்தில் அந்நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்’ என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools