காசாவில் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது – முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பணய கைதிகள் விடுவிக்க வாய்ப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி 45 நாட்களை கடந்து விட்டது. இந்த போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தபோதிலும் இஸ்ரேல் மறுத்துவிட்டது. தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா நகர் மீது குண்டுகளை வீசி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் பதுங்கு குழிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் பல ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பதுங்கு குழிகள் குண்டு வீசி அழிக்கப்பட்டன.

கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டை சேர்ந்த 240 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுவிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பாகவும், பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் கத்தார், அமெரிக்கா, எகிப்து நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. இதன் பலனாக 4 நாட்கள் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் செய்வதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக கத்தார் நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல் அன்சார் தெரிவித்தார். மேலும் இன்று மாலை முதல் பணய கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இதன் முதல்கட்டமாக இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பணய கைதிகள் விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பின்னர் தொடர்ந்து 4 நாட்கள் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் உள்ள மொத்தம் 50 பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news