X

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி டெபாசிட்டை இழக்கும் – பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

டெல்லி மாநகராட்சித் தேர்தலையொட்டி படேல் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாவது:

வாரணாசி மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மண்ணை கவ்வினார். அதன் பிறகு, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி, போட்டியிட்டது. அதன் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அவர்கள் (ஆம் ஆத்மி) 67 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று நான் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்கிறேன். குஜராத் தேர்தலிலும் அவர்கள் இதே நிலையை சந்திப்பார்கள். கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் பாஜக ஆட்சி செய்த மாநகராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கெஜ்ரிவால் அரசு செயல்படுத்திய இரண்டு திட்டங்களை சிசோடியாவால் சொல்ல முடியுமா என சவால் விடுகிறேன்.

சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் வசதியை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இது போன்ற அது பல நல்ல வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.