குடிநீர் தட்டுப்பாடு – காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர்

தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் போகல் பகுதியில் டெல்லி மந்திரி அதிஷி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். முன்னதாக ராஜ்காட் பகுதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், நான் இன்று முதல் “பானி சத்தியாகிரகத்தை” தொடங்குகிறேன். டெல்லி மக்களுக்கு அரியானாவில் இருந்து உரிமையான தண்ணீரை பெறும் வரை போராட்டத்தை தொடருவேன் என்று கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களாக அரியானா மாநிலம் தனது பங்கான 613 எம்ஜிடிக்கு பதிலாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீர் கொடுத்துள்ளது. இதன் விளைவாக டெல்லியில் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது. இதன் விளைவாக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools