குத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த வீரர் பலி

அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும், ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர்.

போட்டியின் 10 வது ரவுண்டில், இருவரும் மோதிக்கொண்ட போது திடீரென பேட்ரிக் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேட்ரிக் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நான்கு நாட்களாக கோமாவில் இருந்த பேட்ரிக் டே நேற்று உயிரிழந்தார்.

பேட்ரிக் மரணமடைந்த செய்தியை, பேட்ரிக் டே மற்றும் கான்வெல் இருவரது விளம்பரதாரரான லூ டிபெல்லா அறிவித்தார்.

இது குறித்து லூ டிபெல்லா கூறுகையில், ‘இது போன்ற நேரங்களில், குத்துச்சண்டை போட்டிகளில் உள்ள ஆபத்தை விளக்குவதோ அல்லது நியாயப்படுத்துவதோ மிக கடினம், இந்த சூழ்நிலையில் குத்துச்சண்டை போட்டிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எங்களிடம் பதில்கள் இல்லை என்றாலும் இது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. பேட்ரிக் டே வுக்கு தலை வணங்குகிறோம்’ என்றார்.

கான்வெல், கூறுகையில், ‘போட்டியை நான் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன். அவரை வெற்றி கொள்வது மட்டுமே என் நோக்கமாக இருந்ததே தவிர அவரை காயப்படுத்துவதோ, தாக்குவதோ என் நோக்கமாக இருக்கவில்லை. குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து இத்துடன் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

இந்த ஆண்டு மட்டும் உலக அளவில், குத்துச்சண்டை போட்டி மைதான வளையத்திற்குள், 3 குத்துச்சண்டை வீரர்கள் இந்த மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news