குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகளான கொப்புளங்கள் இருக்கிறதா? என கண்காணிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஐ.சி.எம்.ஆர். விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை “மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப்” அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து தினமும் வரும் 300 முதல் 400 பயணகளுக்கு ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் 12 வயதில் இருந்து 17 வயதிலான நபர்களுக்கு பெரும்பாலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மத்திய அரசு அறிவித்தவுடன் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படும். தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி ரூ. 386-க்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தற்போது 75 நாட்கள் இலவசமாக செலுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகிறது. வருகிற 7-ந்தேதியும் தடுப்பூசி முகாம் மூலம் 50 லட்சம் பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களையும் எல்லையிலேயே பரிசோதனைகள் செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools