கேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 ஆட்டங்களும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அனேகமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த தொடர் நடைபெறும் சமயத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும். அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதனால் இலங்கை தொடருக்கு 2-ம் தர இந்திய அணியே அனுப்பப்படுகிறது. இந்த அணியில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பிரித்வி ஷா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திவேதியா உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த அணிக்கு கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் உடல்தகுதியுடன் இருந்தால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் தான் கேப்டன். ஆனால் இலங்கை தொடருக்குள் அவர் முழு உடல்தகுதியை எட்டுவாரா? என்பதில் உறுதி இல்லை. பொதுவாக இது போன்று ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு ஓய்வு, காயத்தில் இருந்து மீள்வதற்கான உடற்பயிற்சி முறைகள், களம் திரும்புவதற்கான தீவிர பயிற்சி இவற்றுக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகி விடும்.

எனவே தற்போது கேப்டன் பதவிக்கு தொடக்க ஆட்டக்காரர் 35 வயதான ஷிகர் தவான், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையேத் தான் போட்டி காணப்படுகிறது. தவான் கடந்த இரண்டு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்.-ல் ரன் குவிப்பில்( (8 ஆட்டத்தில் 380 ரன்கள்) முதலிடத்தில் இருக்கிறார். அது மட்டுமின்றி தற்போதைய அணித்தேர்வுக்கு உள்ள வீரர்களில் மூத்த வீரர் தவான் தான். இந்திய அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே கேப்டனாக நியமிக்கப்பட அவருக்கு தான் வாய்ப்பு அதிகம்.

27 வயதான ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பணிச்சுமையை கருத்தில் கொண்டு சமீபகாலமாக அவர் பந்து வீசுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடிய போது ஒரு ஓவர் கூட பவுலிங் செய்யவில்லை. ஆனாலும் அவர் பேட்டிங்கில் தனிநபராக வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அதனால் அவரை கேப்டன் பதவிக்கான வாய்ப்பில் இருந்து ஒதுக்கி விட முடியாது. யாருக்கு தெரியும். கூடுதல் ெபாறுப்பு மூலம் அவரது மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படலாம். முதுகு காயம் ஆபரேஷனுக்கு பிறகு பெரிய அளவில் பந்து வீசாத பாண்ட்யா, ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் கவனம் செலுத்துகிறார்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools