கேரளாவில் ஜூலை 3 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆயுவ் மையம் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அது மட்டுமினறி பல மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்கிறது.

மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்றும் கனமழை கொட்டியது. திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோட்டயம், வயநாடு, பத்தினம்திட்டா எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி, பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, வயநாடு, கோட்டயம் ஆகிய 3 மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரள கடற்கரைகள் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை 3-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது.

அந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அங்கு பள்ளிகள், கல்லூரிகள், டியூசன் மையங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டன. மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு, அம்பலப்புழா, சேர்த்தலா, செங்கனூர் ஆகிய தாலு காக்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 115 வீடுகள் சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools