கைலாசா நாட்டுக்கு போய்விடுவோம் – சீமானின் கிண்டல் பேச்சு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அத்துடன், தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி தமது குடியுரிமை பறிக்கப்பட்டாலும் எந்த கவலையும் இல்லை, கைலாசா நாட்டுக்கு போய்விடுவோம் என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

குடியுரிமை மறுக்கப்பட்டால், எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ராஜா. எங்கள் அதிபர் நித்தியானந்தா இருக்கிறார். அவர் கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டார். அங்கு போய் அழகாய் இருந்துகொள்வோம்.

எங்கள் அனைவரின் குடியுரிமையையும் பறித்தால் கூட கவலை இல்லை. எங்களுக்காக ஒரு முகாம் தருவீர்களா? அதில் இருந்துகொள்வோம். அந்த இடத்தை தனி நாடாக்கி, ஒரு சாமியை கும்பிட்டுக்கொண்டு, அண்ணன் தம்பிகளாக, சாதி மதங்களைக் கடந்து வாழ்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். எல்லா உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்வதற்குப் பெயர் சுதந்திரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news