கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வாலிபர்!

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி வைரசான கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 362 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு சென்றுள்ள பலரும் தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

புதுவை அரசு சுகாதாரத் துறையும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்காக புதுவை அரசு மார்பு நோய் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பணியின் நிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் 3 சீனர்களுடன் பழகி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் புதுவை திரும்பினார். புதுவை வந்த அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அங்குள்ள தனி வார்டில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது உறுதி செய்யப்படும்.

இதற்கிடையே அந்த வாலிபரின் குடும்பத்தில் 3 பேர் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news