கொரோனா தடுப்பு குழு ஆராய்ச்சியாளரை முட்டாள் என்று கூறிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் 84 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அநாட்டில் இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிபர் டிரம்பிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவியுள்ளபோதும் தான் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக கூறிக்கொண்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும், வரும் 3-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவில் அந்நாட்டின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சி இடம்பெற்றுள்ளார். 79 வயது நிரம்பிய ஆண்டனி தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் மிகவும் பிரபலமான நபர் ஆவார்.

முன்னதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் செனெட் சபை உறுப்பினர் அலேக்சாண்டர் கூறுகையில், ‘ஆண்டனி நமது நாட்டின் மிகவும் மதிப்பிற்குறிய பொதுசேவையாளர். அவர் டோனால்ட் ரேகன் உள்பட
6 அதிபர்களின் கீழ் பணி செய்துள்ளார். அவரின் ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பரவியிருக்கும்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலேக்சாண்டரின் கருத்துக்கு அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சி மீதும் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் பிரசார குழு கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது:-

என்னவாக இருந்தாலும் எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என மக்கள் கூறுகின்றனர். அவர்கள் சோர்வடைந்து விட்டனர் (கொரோனா குறித்த செய்திகளால்). பேஹ்சி மற்றும் கொரோனா தடுப்புக்குழுவில் உள்ள முட்டாள்களின் பேச்சை கேட்டு மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.

பேஹ்சி இங்கு 500 ஆண்டுகளாக இருந்தது போல் உள்ளார். பேஹ்சியின் பேச்சை கேட்டிருந்தால் 7 லட்சம் முதல் 8 லட்சம் இறப்புகளை நாம் சந்திக்க நேரிட்டிருக்கும் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools