கொரோனா பற்றி பீதியடைய வேண்டாம் – லியாண்டர் பயஸ் அறிவுரை

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியான்டர் பயஸ் தனது டுவிட்டர் பதிவில் ‘தற்போது நாம் உலகையே உலுக்கும் ஆட்கொல்லி தொற்றுக்கு எதிரான போராட்டத்தை சந்தித்து வருகிறோம். நமது சமுதாயத்தின் நலனை காப்பதில் நம் அனைவரின் பங்கும் அவசியம். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டியது முக்கியம். யாரும் பீதியடைய வேண்டாம், அதே வேளையில் பொய்யான செய்திகளையும் பரப்ப வேண்டாம். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்திகளை எடுத்து சொல்ல வேண்டும்.

கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த வழிமுறை என்னவென்றால், அடிக்கடி நமது கைகளை கழுவ வேண்டும். அதே நேரம் கைகளை கழுவியவுடன் தண்ணீர் குழாயை அடைக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் தண்ணீரையும் சேமிக்க வேண்டும். மொத்தத்தில் பொறுப்புள்ள குடிமகனாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள 46 வயதான பயஸ், 8-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்க உள்ளார்.

அதேபோல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீரர் பஜரங் பூனியா தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக கைகழுவும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு கூறுகையில், ‘மல்யுத்த வீராங்கனை கீதா போகத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் ஆகியோரின் சவாலை ஏற்று வீடியோவை வெளியிட்டு உள்ளேன். அதேபோல் மற்ற மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சங்கீதா போகத், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முன்னாள் ஆக்கி வீரர் சந்தீப் சிங் ஆகியோரும் எனது விழிப்புணர்வு சவாலை ஏற்று தாங்களும் கைகழுவும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news