கொரோனா முடக்கத்தால் பயிற்சி பாதிப்பா? – பி.வி.சிந்து விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகள் போக்குவரத்து பயணத்திற்கு தடைவிதித்தது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெளிநாட்டிற்குச் சென்று பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தியாவிலும் திறந்த வெளி மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுதல் பாதிக்கப்பட்டது.

ஆனால், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, அப்படியொரு பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

பிவி சிந்து கொரோனா தொற்று காரணமாக பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது குறித்து கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றின்போது ஏற்பட்ட இடைவெளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என நினைக்கிறேன். ஏனென்றால், நான் என்னுடைய தொழில்நுட்பம் மற்றும் திறன் குறித்து அதிக அளவில் கவனம் செலுத்தியதுடன், கற்றும்கொண்டேன். அதனால், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக் கூறுவேன்.

கொரோனா தொற்று முடக்கம் என்னுடைய ஒலிம்பிக் தயார்படுத்துதலை பாதிக்கவில்லை. ஏனென்றால் எனக்கு போதுமான அளவு நேரம் கிடைத்தது. தொடரில் விளையாட வேண்டும். அதன்பின் நாடு திரும்பி, மீண்டும் பயிற்சிக்கு தயாராக வேண்டும். இந்த நிலையில் பொதுவாக இதுபோன்ற ஓய்வை வீரர்கள் விரும்புவார்கள். பெரும்பாலான நேரங்களில் பயிற்சிக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு முன் பயிற்சி மேற்கொள்ள அதிகமான அளவு நேரம் கிடைத்துள்ளது.’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools