கோலிக்கு உறுதுணையாக இருப்பேன் – ரோகித் சர்மா

உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா அணி கருதப்படுகிறது.

தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விராட்கோலி சிறந்த அணியை பெற்று இருக்கிறார். சில ஆண்டுகளாகவே அவர் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார். கோலிக்கு எனது உதவி எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது என் பங்களிப்பை அளிப்பேன்.

எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அணிக்கு தான் முக்கியத்துவம் முதலில் இருக்கும். எனது பொறுப்புகளில் அதிக விழிப்புடன் இருக்கிறேன்.

தற்போது என் மீது மட்டுமல்ல, மற்றவர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளேன். நான் தவான், கோலி ஆகியோரின் பணியை முன்னெடுத்து செல்வது தான். இதை எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நிலையாக கொண்டு செல்ல வேண்டும்.

இது நேற்று நான் சிறப்பாக விளையாடினேன். இன்று நீ சிறப்பாக விளையாடு என்று சொல்வது போல் அல்ல. அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியதாவது:-

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் ஒருநாள் போட்டிக்கு நாங்கள் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களே பயன்படுத்துகிறோம்.

இதுபோன்ற ஆடுகளமான பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன் என்பதை மறந்துவிடக்கூடாது.

பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் பற்றி நாம் பேசும்போது, ஒரு பந்துவீச்சாளராக நான் நெருக்கடியில் இருந்தால், அதேபோல தான் எதிரணி பந்துவீச்சாளர்களும் கூட இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலககோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற ஜூன்.5-ந்தேதி மோதுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news