சச்சினுடன் அர்ஜூன் டெண்டுல்கரை ஒப்பிட கூடாது – கபில் தேவ் கருத்து

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர்.

தந்தையை போலவே அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. இடது கை பந்து வீச்சாளரான அவர் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.

22 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டும் இந்த நிலைதான்.

இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இது குறித்து மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது, ‘மும்பை போன்ற அணியில் இடம் பெறுவதும், ஆடும் லெவலில் இடம்பிடிப்பதும் வெவ்வேறானது. அணிக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அர்ஜூன் தெண்டுல்கர் தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டால் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

இந்த நிலையில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கரின் பேட்டிங் தரத்தை எந்த ஒரு நவீன கால மேட்ஸ்மேனுடனும் இணைக்க இயலாது. அவருடைய மகனாக இருந்தாலும் ஒப்பிடக்கூடாது. அவரது வயதை கருத்தில் கொண்டு விளையாட விடுங்கள். குடும்ப பெயரால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது.

அவருக்கு நாம் அழுத்தம் கொடுக்க கூடாது. அவரிடம் எதுவும் சொல்ல நாம் யார்? அவரிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உங்கள் தந்தையை போல் 50 சவீதம் கூட ஆக முடிந்தால் நன்றாக இருக்கும். சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர் என்பதால் எங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools