சச்சினுடன் விராட் கோலியை இப்போது ஒப்பிட முடியாது – ரிக்கி பாண்டிங் கருத்து

கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று 50-வது பிறந்தநாள். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 667 சர்வதேச போட்டிகளில் ஆடி 100 சதங்களுடன் 34357 ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 75 சதங்களை விளாசியுள்ள நிலையில், அவர் 100 சதங்கள் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக இருந்துவருகிறது. மேலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படுகிறார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது:-

நான் எப்போதுமே சொல்லிவருகிறேன். சச்சின் டெண்டுல்கர் தான் எனது காலகட்டத்தில் நான் பார்த்த டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன். ஒரு பவுலிங் அணியாக நாம் எந்தவிதமான திட்டங்களுடன் சென்றாலும், அவையனைத்தையும் முறியடித்துவிடுவார் சச்சின். அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும். எந்த இடமாக இருந்தாலும் சச்சின் தெறிக்கவிடுவார்.

வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதால் தான் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். விராட் கோலியும் நன்றாக ஆடுகிறார். விராட் கோலி மிகச்சிறந்த வீரர் தான். சச்சின் 100 சதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியை இப்போது சச்சினுடன் ஒப்பிட முடியாது. கோலியின் கெரியர் முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

என்று பாண்டிங் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools