சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை தலைமை தான் முடிவு செய்யும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம்முடைய பலமே, நம்முடைய கழக கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாக கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

நாம் எல்லா காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர் கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். எனவே பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக செல்ல வேண்டும். நகர, ஒன்றிய அளவில் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வினியோகிக்க வேண்டும். உள்ளூர் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடுத்த ஓராண்டு காலம் மிகவும் மிக முக்கியமானது.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை தி.மு.க. தலைமை தான் முடிவு செய்யும். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது மாவட்ட செயலாளர்களின் கடமையாகும்.

பவள விழாவை கொண்டாடிய கழகம், 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்கு வெற்றிக்கு காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம். இ

வ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools