X

சாம் கரன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தடைந்தார்

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தனர்.  ஆனால்,  இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய சி.எஸ்.கே. ஆல்-ரவுண்டர் சாம் கரன் அவர்களுடன் வரவில்லை.

இதனால், சாம் கரன் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.  இன்று  அவர் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளார். அவரது வருகை குறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், சாம் கரன் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி உடனான முதல் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார். அடுத்த ஆட்டத்தில் இருந்து தொடர்ந்து விளையாடுவார். ஏற்கனவே டு பிளிஸ்சிஸ் காயம் காரணமாக விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவால் காத்திருக்கிறது. சாம் கரன் தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.