X

சிறந்த பத்திரிகை நிருபருக்கான ‘எம்ஜிஆர்-சிவாஜி’ விருது பெற்ற செய்யாறு பாலு!

தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளர்களான மெளனம் ரவி, டைமண்ட் பாபு, ரியாஸ் அஹமது, சிங்காரவேலு ஆகியோர் இணைந்து நடத்தி வரும் வி4 அமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி ‘எம்ஜிஆர் – சிவாஜி விருதுகள்’ என்ற தலைப்பில் சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சினிமா பத்திரிகை நிருபர்களுக்கும் விருது வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுகான எம்ஜிஆர் – சிவாஜி விருது வழங்கும் விழா ஜனவரி 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவின் கீழ் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பத்திரிகைத் துறையில் சிறப்பான சேவை செய்பவர்களுக்கு வழங்கப்படும் சிறந்த பத்திரிகையாளருக்கான விருது மூத்த சினிமா பத்திரிகை நிருபரான செய்யாறு பாலு அவர்களுக்கு வழங்கப்பட்டது. பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை அம்பிகாவும் இணைந்து நிருபர் செய்யாறு பாலுவுக்கு சிறந்த பத்திரிகை நிருபருக்கான ‘எம்ஜிஆர் – சிவாஜி 2018’ விருதை வழங்கினார்கள்.

குமுதம் உள்ளிட்ட பல முன்னணி வார இதழ்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் பணியாற்றிய செய்யாறு பாலு, தற்போது முன்னணி தமிழ் நாளிதழான தினமலரில் சினிமா நிருபராக பணியாற்றி வருகிறார்.