சிவகார்த்திகேயனின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும், ஆதரவும்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘டான்’ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகளை பெரிதும் கவர்ந்தன. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், டான் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி குறித்து மாணவர்களிடம் பேசியது தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. டான் படத்தில் அவரும், நடிகர் சூரியும் தென் கொரிய மொழியில் பேசுவது போல், உளறல் மொழியில் பேசும் நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும்.

அந்த காட்சியை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன் “நான் தென் கொரிய படங்களை பார்க்கும் போது அதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவார்கள். சில நேரங்களில் யார் ஹீரோ, யார் ஹீரோயின் என்பதே தெரியாது. அது போல் பல்வேறு கொரிய மொழி தொடர்களை பார்த்து தான், ‘டான்’ படத்தில் நான் கொரிய மொழியில் பேசுவது போல் பேசினேன். ஆனால் அது உண்மையான கொரிய மொழி கிடையாது. கொரியர்கள் பார்த்தால் கோபமாகி விடுவார்கள்” என்று நகைச்சுவையாக பேசினார்.

அவரது பேச்சுக்கு மாணவர்களிடையே பெரும் ஆரவாரம் எழுந்தது. இருப்பினும் சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் குறிப்பாக கொரியன் வெப் சீரீஸ்களின் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகராக இருந்து கொண்டு, உருவ கேலி செய்யும் வகையில் அதுவும் மாணவர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியுள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் சிலர் சிவகார்த்திகேயனின் கருத்து இனவாத கருத்துக்கு ஒப்பானது என்றும், அவரைப் போன்ற பிரபலங்கள் பொது இடங்களில் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும் என்றும் சமூக வலைதளக்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் சிவகார்த்திகேயன் நகைச்சுவைக்காக தான் அவ்வாறு பேசினார் என்றும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் அவரது ரசிகர்கள், அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools