X

சுந்தர்.சி-க்கும் எனக்கும் மோதல் கிடையாது – ஆதி விளக்கம்

சுந்தர்.சி படங்களுக்கு இசையமைத்து அவருடன் நெருக்கமாக இருந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது ‘நான் சிரித்தால்’ படத்திலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படங்களை சுந்தர்.சியே தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. சென்னையில் நடந்த ‘நான் சிரித்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது:-

“அரண்மனை 3-ம் பாகத்தில் இசையமைப்பாளர் மாறிவிட்டார் என்பதால் எங்களுக்குள் மோதல் என்ற தகவல் பரவி உள்ளது. தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி சுந்தர்.சி நல்ல நோக்கத்தில் அறிவுரை கூறினார். எனக்கு இசையும் முக்கியம். மோதல் எதுவும் இல்லை. எங்கள் உறவு உயர்வானது.

நான் சிரித்தால் படம் சிறப்பாக வந்துள்ளது. கோபம், துக்கம் உள்பட எல்லா உணர்ச்சிகளுக்கும் சிரிக்கிற மாதிரி கேரக்டர். விதம் விதமாக சிரித்தே நடித்து இருக்கிறேன். கே.எஸ்.ரவிகுமாரும், ரவிமரியாவும் வில்லனாக வருகிறார்கள். படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது மன நிறைவு இருக்கும். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. படத்தை ராணா இயக்கி உள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்” என்றார்.