சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாராந்திர விடுமுறை தினங்களான சனிக்கிழமை (10-ந் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (11-ந் தேதி – சுபமுகூர்த்த தினம்) முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலான அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 9-ந் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (11-ந் தேதி) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news