சென்னையில் கொரோனா உயிரிழப்புகள் குறைய தொடங்கியது

சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து கொண்டே சென்றது. உயிரிழப்புகளும் அதிகரித்தன.

கடந்த 11-ந்தேதி அன்று தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. அன்று ஒரே நாளில் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 100-ஐ தொட்டு விடுமோ என்று அஞ்சப்பட்டது.

ஆனால் அதன்பிறகு கொரோனா உயிரிழப்புகள் சென்னையில் படிப்படியாக குறைந்து வருகிறது. 12-ந் தேதி அன்று 89 பேர் பலியாகி இருந்த நிலையில் 13-ந்தேதி 88 பேரும், 14-ந் தேதி 74 பேரும் உயிரிழந்து இருந்தனர்.

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 82 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒரே நாளில் உயிரிழப்பு அதிரடியாக குறைந்துள்ளது. இது சென்னை மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வி‌ஷயமாகவே உள்ளது.

அதே நேரத்தில் அதிகாரிகளும் கொரோனா உயிரிழப்புகளை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.

உயிரிழப்புகள் குறையும் அதே நேரத்தில் கொரோனா பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி 7,564 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

13-ந்தேதி 6,991 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14-ந்தேதி அது மேலும் குறைந்தது. அன்று 6,538 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (15-ந்தேதி) இந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்தது. அன்றைய தினம் 6,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. நேற்று 6,247 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools