சென்னையில் நாளை முழு ஊரடங்கு – இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடப்படுகின்றன. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல இறைச்சி கடைகளும் மூடப்படுகின்றன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில்தான் இறைச்சி விற்பனை மும்முரமாக நடைபெறும். ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதும்.

இந்த நிலையில் நாளை இறைச்சி கடைகள் முழுவதுமாக மூடப்படுவதால் அசைவ பிரியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் இன்றே இறைச்சிகளை வாங்கி இருப்பு வைக்கிறார்கள்.

இதனால் ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சி கடைகளில் இன்று காலை முதலே கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசை காணப்பட்டது. காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில் மக்கள் குவிய தொடங்கினார்கள்.

இன்று மாலை வரை கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரவு 10 மணி வரை அனைத்து இறைச்சி கடைகளும் செயல்படுகிறது. இதற்காக கறி கோழிகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கறிகோழிகள் கடைகளுக்கு அதிகளவில் விற்பனைக்காக இறக்கப்பட்டன.

வழக்கத்தை விட இன்று அனைத்து கடைகளிலும் அதிகளவிலான கோழிகளை இறக்கி உள்ளனர்.

இதே போல ஆடுகளும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன. ஆடு-மாடுகள் வெட்டக்கூடிய இறைச்சி கூடங்களில் இன்று அதிகளவு கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. வழக்கமாக காலையில் வெட்டப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

இன்று பகல் முழுவதும் இறைச்சி கூடங்களில் ஆடுகள்- மாடுகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools