சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர். மாலையில் தான் தண்ணீர் வடிந்து நிலைமை சரியானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்ததால் சென்னை மழை பாதிப்பை அங்கிருந்தபடியே கேட்டு அமைச்சர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். போர்க்கால அடிப்படையில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் மழை பாதிப்பு நிலவரங்களை பார்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மூத்த அமைச்சர்கள் கண்காணிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர்களை சென்னையிலேயே இருந்து மழை பாதிப்புகளை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அமைச்சர்கள் மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news