சென்னையில் 40 நிமிடங்கள் சந்திரகிரகணம் தெரியும் – வெறும் கண்களால் பார்க்கலாம்

வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சவுந்தர ராஜ பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது. நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும். அப்போது நிலவின் ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம்.

சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம்.

சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது. இதில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணிவரை நிகழும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை 5.38 மணிக்கு தான் சந்திரன் உதயமாகிறது. எனவே முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணிவரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
மேலும் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தான் தமிழகத்தில் காண முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools