சென்னையை புயல் தாக்கும் – ராமேஸ்வரத்தில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் தகவல்

ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் நேற்று பகல் 12 மணி அளவில் கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-

இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும். உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பணம் கையிருப்பு என்பது குறைந்து எல்லாவற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும்.

புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும். எண்ணெய் வித்துக்கள், எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலை உயரும். கல்விக் கட்டணமும் உயரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களின் மென் பொருள் விலை அதிகரிக்கும்.

விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும். புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.

இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். இந்த ஆண்டு கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, இலங்கை கச்சத் தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும்.

அயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.

மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.

இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools