சென்னை வந்தார் ராகுல் காந்தி – இன்று பாதயாத்திரை தொடங்குகிறார்

பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாத யாத்திரையை ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை அக்கட்சியின் தமிழக பிரிவு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இரவு சென்னையில் தங்கிய ராகுல்காந்தி, காலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தமது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு ராகுல்காந்தி வருகிறார். பின்னர் கன்னியாகுமரியில் பாரத் ஜோதா யாத்ரா என்ற பாத யாத்திரையை அவர் தொடங்குகிறார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை கொடித்து தொடங்கி வைக்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை நடைபெறுகிறது. மொத்தம் 150 நாட்கள் 3,570 கி.மீ. தூரம் நடந்து சென்று காஷ்மீரை ராகுல்காந்தி அடைய உள்ளார்.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools