சேரி மக்கள் பற்றிய நடிகையின் சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘இரவின் நிழல்’ திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகை சகாய பிரகிடா முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இரவின் நிழல் படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார், இதுகுறித்து அவர் விளக்கமளித்திருந்தது பேசுபொருளானது. அதில், “இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு போனோமென்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாற்ற முடியாது” என்று பேசியிருந்தார். இவரின் இந்த கருத்து பல சலசலப்பை கிளப்பி இருந்தது.

மேலும், சேரி மக்கள் என்று இங்கு யாரும் தனியாக இல்லை. மனிதர்கள் அனைவருமே கெட்ட வார்த்தை பேசுவார்கள். இதில் சேரி மக்கள் என்று தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், இதற்கு தற்போது நடிகை சகாய பிரிகிடா மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார், அதில் அவர் “இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்.. அது அனைவரிடமும் தவறாக சென்றுவிட்டது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை குறிப்பிட்டு பார்த்திபனும் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே! என்று பார்த்திபன் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools