சையத் முஷ்டாக் அலி டிராபி – விதர்பாவை வீழ்த்தி தமிழகம் வெற்றி

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக் தொடரில் தமிழ்நாடு நேற்று விதர்பா அணியை எதிர்கொண்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விதர்பா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்தது. வாஷிங்டன் சுந்தர் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னிலும், முரளி விஜய் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்த வந்த பாபா அபரஜித் 27 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 32 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் விளாசினார்.

விஜய் சங்கர் 17 பந்தில் 26 ரன்களும், ஷாருக் கான் 16 பந்தில் 19 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா களம் இறங்கியது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே சாய் கிஷோர் தொடக்க பேட்ஸ்மேனை டக்அவுட்டில் வெளியேற்றினார். மற்றொரு தொடக்க வீரரை வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார்.

அதன்பின் வந்தவர்களை விஜய் சங்கர், சாய் கிஷோர் கவனிக்க 14.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த விதர்பா 55 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

சாய் கிஷோர் 3.5 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விஜய் சங்கர் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு ‘பி’ பிரிவில் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ரன்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news