ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்?

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இவரே இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் ஜி.வி.பிரகாஷ் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் தற்போது ரிபெல், இடிமுழக்கம், கள்வன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சைரன், எஸ்.கே.21, சூர்யா 43 போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். எனவே இந்த பட வேலைகள் முடிந்த பிறகு அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema