ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆப்கானிஸ்தான்

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட் 26 ரன்னிலும் 2-வது விக்கெட் 75 ரன்களிலும் விழுந்தது.

இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports