X

ஜெயலலிதா மரண விசாரணை! – லண்டன் மருத்துவர் ஆஜராகும்படி சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஜன 9-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிச.18ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு வராததால் ஜன.7-ம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதே போல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜன.8-ம் தேதியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜன.11-ம்தேதியும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.