டி20 உலகக்கோப்பை முடிந்த உடன் வெற்றி கொண்டாட்டம் – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி

துபாயில் நடந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூ.12.50 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மொத்தம் 635 ரன்கள் சேர்த்து ரன் குவிப்பில் முதலிடம் பிடித்த சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தியதுடன் ரூ.10 லட்சம் பரிசையும் பெற்றார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.டோனி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடுவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவில் தான் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எது சிறந்ததாக இருக்குமோ அந்த முடிவை எடுப்போம். நான் இன்னும் சென்னை அணியில் தான் நீடிக்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், சாம்பியன் பட்டம் பெற்றதற்கான வெற்றி கொண்டாட்டம் எப்போது? என்பதற்கு சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சென்னை அணியின் கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் கிடையாது. தற்போது டோனி 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆலோசகராக இந்திய அணியுடன் இணைந்து விட்டார். எனவே உலக கோப்பை முடிந்து டோனி இந்தியா திரும்பிய பிறகு சிறிய அளவிலான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வோம். அவரது வருகைக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்போம் என குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools