டி20 உலகக் கோப்பை வரை ரோகித் சர்மா கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் – சவுரவ் கங்குலி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்த 3 வடிவங்களுக்கான கேப்டன்களை பிசிசிஐ நேற்று அறிவித்தது. டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிக்கு கேஎல் ராகுல், டெஸ்ட் போட்டிக்கு ரோகித் என நியமிக்கப்பட்டனர்.

2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்குப் பிறகு ரோகித் மற்றும் கோலி இருவரும் டி20-யில் விளையாடவில்லை, மேலும் ஆறு மாதங்களில் டி 20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் திட்டத்தில் இருவரும் இருக்க வேண்டுமா என்று பிசிசிஐ தெளிவாகத் தெரியவில்லை.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் யார் என்பது குறித்து பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் உலகக் கோப்பைக்கு ரோகித் கேப்டனாக செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான கங்குலி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உலகக் கோப்பைகள் இருதரப்புத் தொடரை விட வேறுபட்டவை. ஏனெனில் அழுத்தங்கள் வேறுபட்டவை. அவை இந்த உலகக் கோப்பையில் விதிவிலக்காக இருந்தன.

நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டதால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த கேப்டன். எனவே டி20 உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports