டெண்டுல்கரின் ஐபிஎல் அணியில் கோலி, ரோகித் சர்மாவுக்கு இடம் இல்லை

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவனில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி ஆகியோருக்கு இடமில்லை. இருவரது ஆட்டமும் இந்த ஐ.பி.எல். போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்யவில்லை.

விராட்கோலி 341 ரன் எடுத்து இருந்தார். சராசரி 22.73 ஆகும். ரோகித் சர்மாவின் சராசரி 19.14 ஆக இருந்தது. அவர் 14 ஆட்டத்தில் மொத்தம் 268 ரன்களே எடுத்தார்.

ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெண்டுல்கர் அணிக்கு தேர்வு செய்த லெவனுக்கு கேப்டனாக உள்ளார்.

ஜஸ்பட்லர், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், 3-வது வரிசைக்கு லோகேஷ் ராகுலையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு அவரது அணியில் இடமில்லை.

தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவன் வீரர்கள் வருமாறு:-

ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷிகர்தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா), லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து), தினேஷ் கார்த்திக், ரஷீத்கான், முகமது ஷமி, பும்ரா, யசுவேந்திர சாஹல்.

குஜராத் அணியில் 4 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப் அணியில் தலா 2 பேரும், லக்னோ, பெங்களூர், மும்பை அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools