டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிசெய்ய உள்ளனர். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், நாமக்கல், கரூர் வழியாக திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வந்தது. தொடர்ந்து காவல்கார பாளையம், சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, காவிரி ஆற்றின் வழியாக முக்கொம்பு மேலணைக்கு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்தது.

பின்னர் அதிகாலை 3 மணியளவில் முக்கொம்பு மேலணை பகுதியில் உள்ள 41 மதகுகளின் வழியாக தண்ணீர் திருச்சி நோக்கி திறந்து விடப்பட்டது. நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து காவிரி தாயை வணங்கினார்கள். முக்கொம்பு காவிரி ஆற்றின் வழியாக நேற்று காலை 1,800 கன அடி குறைந்தளவே தண்ணீர் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்க தொடங்கியது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 7 ஆயிரம் கன அடி தண்ணீர் மேலணையில் இருந்து திறக்கப்பட்டது.

முக்கொம்பு மேலணை வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரானது திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் வழியாக சென்று நேற்று நள்ளிரவு கல்லணையை வந்தடைந்தது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்டா மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

நீர் திறப்பின் மூலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools